இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. காலை 8.04 மணிக்கு தேசியக் கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம்
இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்கான அர்ப்பணிப்பான சேவையாற்றியவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கையின் பல் இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலாசார அடையாளமாக நல்லூர் பிரதேச செயலகப்பிரிவு சார்ந்த பிரதேச சிறுவர்கழகச் சிறுவர்கள் கலந்து கொண்டனர். வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாட்டைத்தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுதந்திர தின சிறப்புரையை பிரதேச செயலாளர் ஆற்றினார். அவ்வுரையில் "நாங்கள் அனைவரும் மக்களுடைய வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்கள். அவர்களுடைய தேவையை செவிமடுக்கவும் சேவை செய்யவும் எப்போதும் வினைத்திறன் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் எமது அறிவு திறன் விருத்திக்கும் நாம் பங்காற்ற வேண்டும். சூழல் நேயமுள்ள மனிதர்களாய் வாழுதல் நெகிலியற்ற உலகம் காணல் சவால்கள் மத்தியிலும் சேவைமை நேசித்து வாழ்தல் போன்ற பண்புகளை எப்போதும் எங்களுக்குள் வளர்த்து இச் சுதந்திர தின நிகழ்வில் வளமான நாட்டின் அழகான வாழ்வுக்கு பங்காற்றுவோம்" எனக்குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சுழலைப் பாதுகாக்கும் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து அலுவலகச்சூழலில் சிரமதான நிகழ்வு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மரக்கன்று நடுகையும் இடம்பெற்றது.




















